Saturday 17 August 2013

கேம்பஸ் இண்டர்வியூ பற்றிய சில உண்மைகள்! எச்சரிக்கைகள்!!


கேம்பஸ் இன்டர்வியூ: சில உண்மைகள்... சில எச்சரிக்கைகள்..!

‘கேம்பஸ் இன்டர்வியூ’ - இன்றைய சூழலில் ஒரு மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது இந்த மந்திரச் சொல்தான். மாணவர்களுக்கு மட்டுமல்ல... கல்லூரிகளுக்கும் மாணவர்களைக் கவர அதுதான் தூண்டில் முள்!

'எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தித்தான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைச் சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே பணி நியமனத்துக்கான அப்பாயின்மென்ட் ஆர்ட ரைக் கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத் தில் மாணவர்களும் பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்தச் செய்தி.

'கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் பணி நியமன ஆணை பெற்றும் ஆண்டுக்கணக்கில் பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்.’

சென்னை தவிர... பெங்களூரு, நொய்டா, டெல்லி என நாட்டின் பல பகுதிகளிலும் இதே போன்ற போராட்டங்களை மாணவர்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர். ''அப்பாயின்மென்ட் ஆர்டரை மட்டும் வைத்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறோம். இதனால் வேறு வேலைக்கும் செல்ல முடிய வில்லை. எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்'' என்ற அவர்களின் கோபம் மிக நியாயமானது. கேம்பஸ் இன்டர்வியூ என்ற ஜிகினா பொம்மையின் உண்மை முகம் என்ன? கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்கத் தாமதம் ஆவது ஏன்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரிப வரும், 'சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்.

''கேம்பஸ் இன்டர்வியூ என்பது ஏதோ மாணவர்களுக்கு நல்லது செய்யும் சேவை போன்ற பிம்பம் இருக்கிறது. ஆனால், வளாக நேர்முகத் தேர்வு மூலம் நிறுவனங்களுக்குத் தான் லாபம் அதிகம். அவர்கள் தங்களுக்குத் தேவையான, தகுதியான ஊழியர்களை எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து சலித்து எடுத்துக்கொள்கிறார்கள். கல்லூரிகளைப் பொறுத்தவரை டோட்-1 கல்லூரிகள், டோட்-2 கல்லூரிகள் என இரண்டு வகை உண்டு (DOTE -Directorate Of Technical Education). டோட்-1 என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள். டோட்-2 என்பவை தனியாரால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள். பன்னாட்டு நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப் பிரியப்பட்டு ஆர்வமுடன் வருவது டோட்- 1 கல்லூரிகளுக்குத்தான். டோட்- 2 கல்லூரிகளுக்கு கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு நிறுவ னங்களை அழைத்து வர வேண்டும். இந்த டோட்-2 கல்லூரி வளாகத் தேர்வுகளில் தேர்வா கும் மாணவர்களுக்குத்தான் தற்போது சிக்கல்!

டோட்-2 கல்லூரி மாணவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, கிராமப்புற மாணவர்களாக இருப்பார்கள். எப்படியேனும் பொறியியல் படித்தால் எதிர்காலம் வளமாகிவிடும் என்று நம்பி சொத்துக்களை விற்றுப் படிக்கவைக்கப்படுபவர்கள். இவர்கள் நன்றாகப் படிப்பவர்கள்தான். அதனால்தான் கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். ஆனாலும், நிறுவனங்கள் இவர்களை மட்டும் அலைக்கழிப்பது ஏன்?

அதைத் தெரிந்துகொள்ள ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும் முறையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐ.டி. நிறுவனங்களைப் பொறுத்தவரை ஊழியர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கு ஒரு சொத்துதான். 'எங்களிடம் 2 லட்சம் ஊழியர் கள் இருக்கிறார்கள்... 3 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டித்தான் நிறுவனங்கள் புராஜெக்ட் பிடிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லா யிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்கப் பொருளாதாரத் தேக்க நிலை, ஐரோப்பியப் பொருளாதார வீழ்ச்சி எனப் பல காரணங்களால் எதிர்பார்த்த அளவில் புராஜெக்ட்கள் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழலில் நிறுவனங்கள், மூத்த ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்ப முடியாது என்பதால், புதிய ஊழியர் களை வேலைக்கு எடுப்பதைத் தள்ளிப் போடு கின்றன. அல்லது வேலைக்கே எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றன. அப்படியே வேலைக்கு எடுத்தாலும் முதலில் டோட்-1 கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இறுதியாகவே டோட்-2 கல்லூரிகளுக்கு வருகிறார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற முதல் நிலை நகரங்களில் இருக்கும் கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இரண்டாம் நிலை நகரங்களை ஒதுக்குகின்றனர் என எளிமையாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். இதுதான் தற்போதைய பிரச்னையின் நதி மூலம்!'' என்கிறார் செந்தில்.

ஹெச்.சி.எல். நிறுவனத்தில் மட்டும் இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 6,000 பேர் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலையில் அமர்த்தப்படாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க ஃபேஸ்புக்கில் 'நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபோரம்’ என்ற பெயரில் குழு ஒன்று இயங்குகிறது. அந்தக் குழுவைச் சேர்ந்த சுதிர் என்பவரிடம் பேசியபோது...

''ஒருமுறை கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு நிறுவனத்தில் தேர்வாகிவிட்டால், கல்லூரி முடியும் வரை வேறு நிறுவனத்தின் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொள்ள முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. ஆனால், திறமை காரணமாக முதல் முயற்சியிலேயே ஆர்டர் வாங்கியவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க... அதன் பிறகு கேம்பஸில் தேர்வானவர்கள் நல்ல வேலையில் சேர்ந்துவிட்டனர். இவர்கள் ஏமாளிகளாகக் காத்திருக்கிறார்கள். வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் 'நீங்க ஃப்ரெஷ்ஷரா அல்லது அனுபவசாலியா?’ என்று கேட்பார் கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்னை இல்லை. வேலையில் சேர்ந்துவிடலாம். 'வேலைக்காக வெட்டியாகக் காத்திருந்தேன்’ என்று சொன்னால், எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். ஒவ்வொரு கல்லூரியிலும் நன்றாகப் படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை மறை முகமாகச் சிதைக்கும் போக்கு இது!'' என்று கேம்பஸ் இன்டர்வியூவின் அதிர்ச்சியான மறுபக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறார் சுதிர்.

எனில், இதில் கல்லூரிகளின் பொறுப்பு என்ன? கேம்பஸ் மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், அது கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம்தானே! அதற்காகவேனும் அவர்கள் இதில் தலையிடலாம் தானே என்று கேட்கலாம். ஆனால், யதார்த்தம் என்னவெனில், கல்லூரிகளே நிறுவனங்களை கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூ வுக்கு அழைத்துவருகின்றன. ஆகவே, 'எங்கள் மாணவர்களுக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை?’ என்று கேட்க முடியாது. கேட்டால், அடுத்த ஆண்டு கேம்பஸுக்கு வர மாட்டார் கள். இதனால் கல்லூரிகள் இதைப்பற்றிக் கண்டுகொள்வது இல்லை. ஆனால், எந்தக் கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 'எங்கள் கல்லூரி யில் இருந்து இவ்வளவு பேர் கேம்பஸ் மூலம் தேர்வாகியுள்ளனர்’ என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். அதில் எத்தனை பேர் வேலையில் சேர்ந்துள்ளனர் என்று கேட்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

4 comments:

  1. நல்லதொரு எச்சரிக்கை பகிர்வு
    நன்றி

    அமர்க்களம் கருத்துக்களம்

    www.amarkkalam.net

    ReplyDelete
  2. நன்றி நண்பரே

    ReplyDelete

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir